புதுடெல்லி: நாட்டின் உயரிய நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தில் ஐந்து புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் நீதிபதிகளின் ஒட்டுமொத்த பணி பலம் கணிசமாக அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையை 34 என்ற எண்ணிக்கையில் இருந்து 38 ஆக உயர்த்தி ஒன்றிய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன், சிறப்பு அவசர சட்டத்தை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரை செய்த ஐந்து பெயர்களுக்கு ஒன்றிய அரசு கடந்த 1ம் தேதி முறைப்படி ஒப்புதல் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட ஷீல் நாகு, சந்திரசேகர், சஞ்சீவ் சச்தேவா, அருண் பள்ளி மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வக்கீல் வி.மோகனா ஆகிய ஐந்து பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் வி.மோகனா என்பவர் நேரடியாக வக்கீல் பணியில் இருந்து நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மற்ற நான்கு பேரும் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளாக பணியாற்றி பதவி உயர்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய நியமனங்கள் மூலம் உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை 32 என்ற எண்ணிக்கையில் இருந்து 37 ஆக உயர்ந்துள்ளது.
