ஊத்துக்கோட்டை: எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை, ரூ.12,301 கோடியில் 133 கிலோ மீட்டர் தூரம் உள்ள 6 வழிச்சாலை பணிகள் தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரை மந்தகதியில் நடக்கிறது. இதனை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். எண்ணூர் துறைமுகம் முதல், மகாபலிபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை ரூ.12 ஆயிரத்து 301 கோடி மதிப்பீட்டில் 133 கிலோ மீட்டர் தொலைவில் ஆறு வழிச்சாலை பணிகள் நடக்கிறது. இதற்காக, பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சிங்கப்பெருமாள் கோவில் சுற்றியுள்ள பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சென்னை – எண்ணூர் துறைமுகத்திற்கு வரும் கனரக வாகனங்களால் சென்னையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிகள், வேலை, நோயாளிகளை ஏற்றிச்செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றன. அதுமட்டுமின்றி, சென்னையின் புறநகர் பகுதியில் இருந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்கள் எண்ணிக்கையால் சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கடந்த திமுக ஆட்சியில் 2022ம் ஆண்டு சென்னை எல்லை சாலைத்திட்டம் என்ற பெயரில் எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை வரையில் ரூ.12,301 கோடி திட்ட மதிப்பீட்டில் 133 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆறு வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இப்பணியானது பிரிவு ஒன்றின் படி, எண்ணூர் முதல் தச்சூர் வரை 25 கிலோ மீட்டர் தொலைவிலும், பிரிவு 2ன் படி தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரை 13 கிலோ மீட்டர் வரையிலான பணிகள் என இதுபோல் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இச்சாலை அமையும் வழித்தடங்களில் 349 பாலங்கள், 5 பெரிய பாலங்கள், 20 சிறிய பாலங்கள், 324 தரைப்பாலங்கள், 49 சுரங்க வழிகள், 4 மேம்பாலங்கள், 3 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. 81 கிராமங்கள் வழியாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இந்த ஆறுவழிச்சாலை பணிகள் தற்போது தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரை உள்ள 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மண் இல்லாததால் மந்த கதியில் நடைபெற்று வருகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு, 6 வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
