தஞ்சாவூர், மே 28: கபிஸ்தலம் அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ளிய லாரி பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் கபிஸ்தலம் காவல் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கபிஸ்தலம் அருகே உள்ள அலவந்திபுரம் காவிரி ஆற்றில் எந்தவித அரசு அனுமதியும் இன்றி அசோக் லைலாண்ட் லாரி மூலம் மணல் அள்ளியதை போலீசார் வளைத்து மறித்து பிடித்தனர்.
அப்போது, மணல் அள்ளிக் கொண்டிருந்த சுவாமிமலை தோப்பு தெரு மனோகர் மகன் அருள் வயது (34) என்பவரை கைது செய்தும், லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள கும்பகோணம் மேலக்காவேரி மூப்பகோயில் சேகர் மகன் கார்த்தி என்பவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
