நெல்லிக்குப்பம் அருகே சொகுசு காரில் கடத்தி வந்த 10 கிலோ நகைகள் பறிமுதல்: பெங்களூரை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை

நெல்லிக்குப்பம்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம், தென்பெண்ணை ஆற்றின் உயர்மட்ட மேம்பாலம் அருகில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சோதனைச்சாவடியில் நேற்று மாலை போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது பெங்களூரில் இருந்து கடலூர் செல்வதற்காக காரில் 10 கிலோ தங்க நகைகளை எடுத்து வந்தது தெரியவந்தது.

தீவிர விசாரணையில் காரை ஓட்டிவந்தது பெங்களூரை சேர்ந்த பிரபு மணி என்றும், காரில் இருந்தவர் பெங்களூருவை சேர்ந்த ஹர்ஷா (50) எனவும் தெரியவந்தது. பின்னர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் உடனடியாக நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து 10 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்து, கடலூர் மாவட்ட வணிக வரித்துறை இணை இயக்குனர் சுமித்ரா, துணை இயக்குனர் அசோக்குமார் ஆகியோரிடம் அவற்றை ஒப்படைத்தனர்.

பின்னர் வணி வரித்துறை நடத்திய விசாரணையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு 10 கிலோ நகைகளை கொண்டு வருவதற்கான ரூ.93 லட்சத்து 90 ஆயிரம் சுங்க வரியை செலுத்தாமல் விற்பனைக்காக அவற்றை கடத்தி வந்தது உறுதியானது. இதனை தொடர்ந்து, ஹர்ஷா மற்றும் டிரைவர் பிரபு மணி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட தங்க நகைகள் எங்கு கொண்டு செல்லப்பட்டது, அவற்றை அனுப்பி வைத்த உரிமையாளர் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றன.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்த வணிக வரித்துறையினர், அடுத்த கட்டமாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

Related Stories: