அரக்கோணத்தில் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

அரக்கோணம்: பணியிட மாறுதல் கோரி ரயில்வே ஊழியர்கள் அரக்கோணத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக தங்களுக்கு பணியிடமாறுதல் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்து உள்ளனர்.

இதனை கண்டித்து அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரக்கோணம் ஏசி லோகோ ஷெட் ரயில்வே பொறியியல் பணிமனையில் திருத்தணி மற்றும் புத்தூர் பகுதிகளில் பணியாற்றும் சுமார் 600 ரயில்வே ஊழியர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். காலியாக இருக்கும் பணியிடங்களை காரணம் காட்டி தெற்கு ரயில்வே தங்களுக்கு இடமாற்றம் வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.

தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (DREU) சங்கம் சார்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற ரயில்வே ஊழியர்கள் உடனடியாக தங்கள் நீண்ட நாள் கோரிக்கையான உரிய பணியிட மாறுதல் வழங்க வேண்டும், ரயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் ரயில்வே நிர்வாகத்தின் பணியிட மாற்ற நடைமுறைகளில் உள்ள குளறுபடிகளை களைய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: