நமது கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்களிலும் முன்னிலை வகிக்கும் ஒரு மங்கள பொருள்தான் வெற்றிலை பாக்கு ஆகும்.
தாம்பூலத்தில் ருத்ரன் விஷ்ணு சூரியன், சந்திரன், லட்சுமி சரஸ்வதி பார்வதி தேவி பூதேவி இந்திரன் காமதேவன் மற்றும் ஜேஷ்டா தேவி வாசம் செய்வதாக சாஸ்திரம் கூறுகிறது.
இந்த 11 தேவதைகளும் தாம்பூலத்தில் நித்தியவாசம் செய்வதால் இதனை பிரசன்னம் பார்க்க நம் முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர் அதுதான் தாம்பூல பிரசன்னம் ஆகும்.
நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும் நோயின்றி காக்கும் தன்மை கொண்ட கற்பக மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று வெற்றிலைக்கு நாகவல்லி என்ற மற்றொரு பெயரும் உண்டு. விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்று அழைக்கின்றனர். பொதுவாக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும்போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதேநேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் கபம் போன்றவை சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ, குறையும் போதோ நோய் வருகிறது என்று சொல்கிறார்கள். இது முற்றிலும் சரியான காரணமாகும். இந்த மூன்றும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்புக்கு வருகிறது. இந்த மூன்று நிலை
களையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.
பாக்கிலிருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்கக் கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்க வல்லது. வெற்றிலையில் உள்ள உறைப்பு கபத்தை நீக்கிவிடும். இப்படிப் பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பிலுள்ள மூன்று தோஷங்களையும் முறைப்படுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இது மட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம் கிராம்பு, ஜாதி, பத்திரி, போன்றவை வாயில் உள்ள கிருமிகளை மட்டுப்படுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
வெற்றிலையில் 84.4% நீர் சத்தும் 3.1% புரதச்சத்தும் 0.8 கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது.
தற்போதைய ஆராய்ச்சியில் வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்பு திறன் கொண்ட. சவிக்கால் என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும் வாய்ப்புண் வயிற்றுப் புண் நீங்கும்.
வெற்றிலை பரிகாரங்கள்
அனுமனுக்கு உகந்த வெற்றிலை மாலை
இராவணனால் சிறை எடுக்கப்பட்ட சீதை அசோகவனத்தில் தன்னை தரிசித்த அனுமனை அருகிலிருந்த வெற்றிலை கொடியின் இலைகளைப் பறித்து அனுமனின் தலையில் இட்டு வெற்றி பெற ஆசீர்வதித்ததாக இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படி வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.
வறுமை நீங்கி செல்வம் பெருக எளிய பரிகாரம்
வெற்றிலைக் கொடி ஒன்று வாங்கி வந்து அதை நிலத்திலோ பூந்தொட்டியிலோ நட்டு அதற்கு முன் மூன்று 5 ரூபாய் நாணயங்களை போட்டு சிறிது மஞ்சள் மற்றும் குங்குமம் ஆகியவற்றையும் போட்டு வெற்றிலை கொடியை நட்டு தினமும் நீர் விட்டு வர வேண்டும் கொடி வளர வளர பண தேவைகள் குறைந்து பணவரவு மிகுதியாகும்.
காரிய வெற்றிக்கு
காலையில் வெற்றிலையில் தேன் தடவி 24 நிமிடம் கழித்து வெறும் வயிற்றில் அதை மென்று சாப்பிட்டால் நாம் நினைத்து போகக்கூடிய காரியம் வெற்றி அடையும்.
விரும்பிய வரன் அமைய
ஒரு வெற்றிலையில் விரும்பியவரின் பெயர் எழுதி கடவுளிடம் வேண்டிய பின்னர், அதை தேன் பாட்டிலில் போட்டு வைக்கவும். (திருமணத்திற்கு தகுந்த ஆண் – பெண்கள் மட்டுமே செய்யவும்)
வாஸ்து தோஷம் நீங்க…
வீட்டு தலைவாசல் நிலையின் நீளம் அகலத்தை அளந்து அந்த அளவிற்கு அறுகம்புல் மாலையை நிலையில் மாற்ற வேண்டும். அதேபோல மகாலட்சுமி குடியிருக்க நீள அளவுக்கு வெற்றிலை மாலை சூட்ட வேண்டும்.
நிலையில் சூட்டப்பட்ட அறுகம்புல் மாலையையும் மகாலட்சுமிக்காக சூட்டப்பட்ட வெற்றிலை மாலையையும் மறுநாள் காலையில் கழற்றி மூன்று படி தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். அறுகம்புல் மாலை மற்றும் வெற்றிலை மாலையில் பட்ட தண்ணீரை வீட்டிற்குள் அனைத்து இடங்களிலும் தெளித்துவிட வேண்டும் வீட்டின் வெளிப்புறத்திலும் தெளிக்க வேண்டும் பிறகு அறுகம்புல் மாலையையும் வெற்றிலை மாலையையும் ஒரு வெள்ளை துணியில் முடிந்து ஆற்றில் போட வேண்டும் வாஸ்து தோஷம் விலகிவிடும்.
சந்திராஷ்டம தின பிரச்னை தீர
சந்திராஷ்டமம் வரும் நாளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் பிரச்னைகள் குறையும்.
கெட்ட சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க
அவரவர்கள் நல்ல நாளாக தேர்ந்தெடுத்து ஒரு நல்ல வெற்றிலையில் செந்தூரம் கொண்டு ராம் என்ற இம்மந்திரத்தை 1008 உரு ஜெபித்து அந்த வெற்றிலையை சுருட்டி தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் அணிந்து கொள்ள பூத பிரேத பிசாசு துர்சக்திகளின் பாதிப்புகள் நிரந்தரமாக நீங்கும்.
தனிநபருக்கு இல்லாமல் ஒரு வீடு, கடை, தொழிற்சாலை போன்றவற்றிற்கு துஷ்ட சக்திகளால் பாதிப்பு என்றால் மேற்கண்ட வெற்றிலையை ஒரு சிவப்புத் துணியில் முடிந்து வீடு கடை தொழிற்சாலை வாசலில் கட்டி வைக்கவும்.
வெற்றிலை மீது எரியும் கற்பூரம் தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உடையது.
சனி தோஷம் விலக
ஒரு வெள்ளிக்கிழமையன்று 8 வெற்றிலை, 8 பாக்குடன் சிறிது எள் கலந்து தலைக்கு அடியில் வைத்து தூங்கவும்.
மறுநாள் காலையில் அதிலிருந்து சிறு எள் எடுத்து அருகில் உள்ள கோவிலில் தீபம் ஏற்றவும் மீதி எள்ளை அரிசியில் கலந்து சாதம் சமைத்து காக்கைக்கு வைத்து மீதியை சாப்பிட்டால் சனி தோஷம் விலகும். சனி தோஷம் மட்டுமல்லாது மற்ற கிரக தோஷங்களுக்கும் வெற்றிலை பாக்கு ஒரு சிறந்த பரிகாரமாக விளங்குகிறது.
விருப்பங்கள் நிறைவேற
இடித்துச் சலித்த பச்சரிசி அல்லது திணை மாவில் ஏலக்காய் வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். அதை காமாட்சி விளக்குபோல பிடித்து அதனுள் நெய்விட்டு பஞ்சுத் திரி போட வேண்டும். இஷ்ட தெய்வத்தின் முன் ஒரு வாழை இலை அல்லது தாம்பாளத்தில் இரண்டு தேங்காய், பழம் வெற்றிலை பாக்கு மற்றும் மாவிளக்கை வைத்து ஏற்ற வேண்டும். விளக்கேற்றியதும் நாம் எந்த தெய்வத்தை நினைத்து ஏற்றுகிறோமோ… அந்த தெய்வம் வீட்டிற்குள் எழுந்தருளி இருப்பதாக எண்ணி நம் விருப்பத்தை நிறைவேற்றித் தரும்படி வேண்டிக் கொள்ள வேண்டும் அந்த தெய்வத்திற்குரிய ஸ்லோகம் அல்லது பாடல் பாடுவது சிறப்பு.
ஒரு நாழிகை (24 நிமிஷம்) விளக்கு எரிவது அவசியம்வேண்டுதல் நிறைவேறிய பிறகு மீண்டும் ஒருமுறை விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
