மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயிலில் இன்றிரவு வேடபரி: பக்தர்கள் பொங்கலிட்டு, கிடா வெட்டி வழிபாடு

மணப்பாறை:திருச்சி மாவட்டம் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு. கிடா வெட்டி, அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கரும்பு தொட்டில் என பல்லாயிரக்கணக்கான பக்தர் நேர்த்திகடன் செலுத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சுமார் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேப்பிலை மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மன் பல்லக்கில் வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்று விழாவின்் முக்கிய நிகழ்ச்சியான பால்குட ஊர்வலம் நடந்தது.

மற்றொரு முக்கிய நிகழ்வாக இன்றிரவு வேடபரி நடக்கிறது. அலங்கரிக்கப்ப்டட அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேடபரி வீதியுலா நடைபெறும். இதையொட்டி இன்று(19ம் தேதி) அதிகாலை முதல் கோயில் முன்பு நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு, மாவிளக்கு போட்டு அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக காளியம்மன் கோயிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி, அக்னி காவடி, பறவை காவடி, அலகு குத்தி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும், கரும்பு தொட்டில் எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: