×

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவி செய்தோம் – முதல் முறை ஒப்பு கொண்டுள்ள சீனா

பெய்ஜிங்: கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற ராணுவ ரீதியிலான மோதலின் (ஆபரேஷன் சிந்தூரின்) போது, ​​பாகிஸ்தானுக்கு நேரடியாக தொழில்நுட்ப உதவியை வழங்கியதாக சீனா முதன்முறையாக ஒப்பு கொண்டுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல்கள் தீவிரமடைந்தன. இந்நிலையில் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் மேம்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்களின் வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றும், சீ’ன விமானத் தொழில் கழகத்தின் விமான வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர் ஜாங் ஹெங் என்பவருடனான நேர்காணலை, அந்நாட்டின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் ஒளிபரப்பியதாக ‘சவுத் சீனா மார்னிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

AVIC-ன் ‘Chengdu Aircraft Design and Research Institute’-ஐ சேர்ந்த பொறியாளர் ஜாங் ஹெங், பாகிஸ்தானுக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கிய குழுவில் தானும் ஒருவராக இருந்ததாக கூறி இருக்கிறார். சீனாவின் நவீனப் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) உருவாக்குவதில் இந்நிறுவனம் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாங் தனது பேட்டியில் கூறியதாவது: “எங்கள் தளத்தில் இருந்த போது, ​​போர் விமானங்கள் புறப்படும் சத்தம், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைச் சைரன்களின் இடைவிடாத அலறலை நாங்கள் அடிக்கடி கேட்டோம். கடந்த மே மாதத்தில், காலைப் பொழுதின் பிற்பகுதியிலேயே வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை எட்டியது. இது எங்களுக்கு உடல் மற்றும் மனதளவில் ஒரு உண்மையான கடும் சோதனையாக இருந்தது. சீன தரப்பில் இருந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முழுத் திறனுடன் செயல்படுவதை உறுதி செய்வதே எங்கள் குழுவிற்கான பணியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

இதனிடையே கடந்த ஆண்டு பாகிஸ்தானின் ராணுவத் தளவாடங்களில் 81 சதவீதம் சீனத் தயாரிப்புகள் என்றும், சீனா தனது ஆயுதங்களுக்கான ஒரு “நேரடிப் பரிசோதனைக் களமாக” பாகிஸ்தானைப் பயன்படுத்தி வருவதாகவும் இந்திய ராணுவம் தகவல் தெரிவித்திருந்தது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) தரவுகளின்படி, 2015-ஆம் ஆண்டிலிருந்து சீனா பாகிஸ்தானுக்கு 8.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. மேலும் 2020 முதல் 2024 வரையில் உலகின் நான்காவது மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக சீனா இருந்தது, இந்த காலகட்டத்தில் அதன் மொத்த ஆயுத ஏற்றுமதியில் 63 சதவீதம் பாகிஸ்தானுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆபரேஷன் சிந்தூரின் போது மொத்தம் மூன்று எதிரிகளை எதிர்கொண்டதாக இந்தியா கூறி இருந்தது. இதில் பாகிஸ்தான் நேரடி எதிரி என்றாலும் அதற்கு ஆயுதங்கள் வழங்கி ஆதரவளித்தது சீனாவும், துருக்கியும் என்று ராணுவத் துணை தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர். சிங் கடந்த ஜூலை 2025-ல் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Operation Shintour ,Pakistan ,China ,Beijing ,Operation Chintour ,India ,Jammu and Kashmir ,
× RELATED “மாற்றம் கொண்டு வருவோம்” என முழங்கிய...