×

வறுத்தெடுக்கிறது வெயில்; வரவேற்கும் மலைகளின் இளவரசி

கொடைக்கானல்: வறுத்தெடுக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள மலைகளின் இளவரசியாம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்ட நிலையில், கோடை சீசன் களைகட்டியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதால், கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். வழக்கமாக வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். வார நாட்களில் குறைவாக இருக்கும். தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், வார நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண்பாறை, பைன் மரக்காடுகள், குணா குகை, மோயர் பாயின்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு கட்டணம் இன்றி சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதற்கு இன்றும், நாளையும் மாவட்ட நிர்வாகம் இலவச அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிலையில் இன்று காலை கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் பிரையன்ட் பூங்காவில் உற்சாகமாக பொழுது போக்கினர். இதேபோல தூண், பாறை, ஹோக்கர் வாக் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிப் பார்த்தும், புகைப்படம், செல்பி எடுத்தும் பொழுது போக்கினர். தற்போது கொடைக்கானலில் பகலில் மிதமான வெப்பம், இரவில் இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

ஏற்காடு
ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் ஏரி, படகு இல்லம், மான்பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ஐந்திணை பூங்கா, தாவரவியல் பூங்கா, அண்ணா பூங்கா, சேர்வராயன் கோயில், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் இடங்களாகும். ஏற்காட்டிற்கு கோடை விடுமுறை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

அங்குள்ள படகு இல்லத்தில் நீண்டவரிசையில் நின்று டிக்கெட் எடுத்து ஏரியில் குடும்பத்துடன் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர். தாவரவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, லேடீஸ் சீட், பக்கோடா பாய்ண்ட் உள்ளிட்ட பகுதிகளை கண்டுகளித்தனர்.

Tags : Kodaikanal ,Godaikanal ,Dindigul district ,Princess of the Hills ,
× RELATED திமுக மாணவரணி சார்பில் அமைக்கப்பட்ட...