உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: தொழிலாளர்களின் உண்மை தோழனாக என்றென்றும் திமுக திகழ்ந்திடும் என்றும் தொழிலாளர்களுக்கு உளங்கனிந்த மே தின வாழ்த்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உழைப்பு என்பது மனித இனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, அதன் அரசியல், சமூகப் பரிணாமத்திற்கும் அடிப்படைக் காரணியாக இருக்கும் உந்து சக்தியாகும். உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு எனது உழைப்பாளர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொழிலாளர்களுக்காக மே நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை, சென்னையில் மே தினப் பூங்கா, தொழிலாளர் நல வாரியம் என எண்ணற்ற பங்களிப்புகளைக் கழக ஆட்சிதோறும் பேரறிஞர் அண்ணா அவர்களும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் செய்து வந்தனர்.

‘தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் சந்தித்திருக்காவிட்டால் நானும் கம்யூனிஸ்டாகத்தான் ஆகி இருப்பேன்’ என்று சொன்ன தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்த போதெல்லாம் தொழிலாளர் நலம்காக்க எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றியது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளாக மின்னிக் கொண்டிருக்கிறது.

அந்த வழித்தடத்தில்தான் திராவிட மாடல் அரசிலும், இந்தியாவுக்கே வழிகாட்டும் பல தொழிலாளர் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். கழனியிலும் தொழிற்சாலைகளிலும் பாடுபடும் உழைப்பாளத் தோழர்களின் நலன்களைப் பாதுகாப்பது போலவே, தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள பெண்கள் மற்றும் திருநங்கைகள் புதிய ஆட்டோ ரிக்சா வாங்க மானியம், பதிவுபெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி, அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன்களையும் பாதுகாக்கிறோம்.

அதோடு, இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்திடவும் நலவாரியம் உருவாக்கப்பட்டு, அதில் பதிவு செய்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதியதாக e-Scooter வாங்க மானியம் வழங்கும் புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி, அவர்கள் பணிகளுக்கிடையே ஓய்வு எடுக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி சாதனைகள் பல படைத்தும், பாட்டாளி மக்களின் உயர்வுக்கு நாம் கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்தும் விதமாகவும், “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்குக் கை விலங்குகளைத் தவிர எதுவுமில்லை” என அழைத்த உலக மாமேதை கார்ல் மார்க்சுக்குச் சென்னையில் சிலை அமைத்துள்ளோம். இப்படி, சொல்லாலும் – செயலாலும் – வரலாற்றுச் சின்னங்களாலும் உழைப்பாளர்களையும் உழைப்பையும் போற்றுகிறோம்.

உழைப்பையும், உழைப்போரையும் கொண்டாடும் இந்த மே நாளில், திராவிட முன்னேற்றக் கழகம் தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக என்றென்றும் திகழ்ந்திடும் என்ற உறுதியையும், உழைக்கும் தோழர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: