புதுடெல்லி: வீடு வழங்காமல் பணமோசடி செய்த விவகாரத்தில் ரஹேஜா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. ரஹேஜா டெவலப்பர்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் புதுடெல்லியின் குர்கானில் ரஹேஜா ரேவந்தா என்ற பெயரில் வீடு கட்டி தருவதாக விளம்பரங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து பணத்தை பெற்றுள்ளது. ஆனால், அவ்வாறு வசூலித்த பணத்தை வேறு இடங்களுக்கு திசை திருப்பி விட்டு மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், 45,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி நீண்ட காலங்களாகியும் வீடுகளும் ஒப்படைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு சுமார் ரூ.2,500 கோடி மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி காவல்துறை பல வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதனடிப்படையில் டெல்லி, நொய்டா உள்பட 7 இடங்களில் ரஹேஜா நிறுவனத்துக்கு சொந்தமான வளாகங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதனிடையே, இந்த குற்றச்சாட்டுகளை ரஹேஜா டெவலப்பர்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.
