வேலூர்: தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று காலை முதல் மாலை வரை நடந்து முடிந்தது. வேலூர் சார்பனாமேடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் மலேசியாவில் சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க நேற்று முன்தினம் வேலூருக்கு வந்தார். நேற்று வேலூர் ராமலிங்கம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் வாக்களித்தார். பின்னர், விஜயலட்சுமி கூறுகையில், ‘நான் மலேசியாவில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். நேற்று முன்தினம் தான் மலேசியாவில் இருந்து வேலூருக்கு வந்தேன். வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமைன்னு நினைக்கிறேன். என்னோட கடமையை செய்துவிட்டேன். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலில், யார் வந்தால் நன்றாக இருக்கும் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தேர்தலில் வாக்களிக்க ரூ.40 ஆயிரம் செலவு செய்து வந்துள்ளேன்’ என்றார்.
ராணிப்பேட்டை ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. மின் பொறியாளரான இவருக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்தில் வேலை கிடைத்தது. அவர் தனது குடும்பத்துடன் அங்கு தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முரளி தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திரும்பினார். தொடர்ந்து நவல்பூரில் உள்ள கங்காதரா நிதியுதவி நடுநிலைப்பள்ளியில் முரளி மற்றும் அவரது மனைவி, மாமியார், மனைவியின் சகோதரி ஆகியோருடன் சென்று தங்களின் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
