சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் வணிகர்களின் தினமான மே 5ம் தேதி தமிழ்நாடு அரசு வணிகர் தினமாக அறிவித்தமைக்கு நன்றி கூறும் விதமாகவும், தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் 100 அடி உயர கொடிகம்பத்தில் வணிக கொடியை விக்கிரமராஜா நேற்று ஏற்றி வைத்தார்.
மேலும், வணிகர்களுக்கு எதிரான அதிகார நடைமுறைகளை அகற்றுவதற்கான போராட்டங்கள், கண்டன செயல்பாடுகள் இவை அனைத்தையும் வணிகர்கள் தங்களின் கண்முன் நிறுத்த வேண்டும். வணிக சமுதாயமான நமக்கு அரசின் வழிகளில் பெறப்பட்ட நன்மைகளை நினைவு கூர்ந்து வாக்களிப்பதில், தங்களின் மனசாட்சியை முன்னிலைப்படுத்தி சரியான நபர்களின் கைகளில் நமக்கான வாக்குறுதியை சொல்லிற்கேற்ப செயல்படும் ஆட்சியாளர்களிடம் நம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும்.
அடுத்து வரும் 5 ஆண்டுகாலம் தங்களின் நிலைப்பாடுகளை உறுதி செய்துக்கொள்ள தடுமாற்றமின்றி செயல்பட 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்திட வேண்டும். பணியாளர்களுக்கு முழு ஊதியத்துடனான வாக்களிக்கும் வாய்ப்பினை நிச்சயம் அளித்திட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
