கிருஷ்ணகிரி, ஏப்.19: கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள், உத்தனப்பள்ளி அருகே நாகமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புறம்போக்கு நிலத்தில் கருங்கல் வெட்டி கடத்த முயன்ற நபர்கள் அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். உடனே, சம்பவ இடம் சென்று அதிகாரிகள் விசாரித்த போது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கருங்கல்லை வெட்டி டிராக்டரில் கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, கருங்கல்லுடன் டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், உத்தனப்பள்ளி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
