இரட்டை குடியுரிமை விவகாரம் ராகுல் மீது வழக்கு பதிய அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு

லக்னோ: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் குடியுரிமை வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜ நிர்வாகி விக்னேஷ் ஷிஷிர் என்பவர், “ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை உள்ளது. அதுதொடர்பான ஆவணங்களும் என்னிடம் உள்ளது. அவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்” என லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து விக்னேஷ் ஷிஷிர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நேற்று விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ அமர்வு ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை தொடர்பாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. மேலும் வழக்கு பதிவு செய்த பிறகு இந்த விவகாரத்தை விசாரிக்க ஒன்றிய அமைப்பின் உதவியை மாநில அரசு நாடலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: