பாடாலூர்,ஏப்.16: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் சித்திரை முதல் நாளையொட்டி மாரியம்மன் சுவாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடைபெறுவது வழக்கம்.அதேபோல் இந்தாண்டும் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் சுவாமி வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது.
இதையொட்டி மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சிங்க வாகனத்தில் மாரியம்மன் வீதி உலா மாரியம்மன் கோயில் முன்பு தொடங்கி முக்கிய வீதியின் வழியாக வீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு தேங்காய், வாழைப்பழம் போன்ற பொருட்களால் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
