பெங்களூரு: யோகேஷ் கவுடா கொலை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உட்பட 17 பேரை குற்றவாளிகள் என அறிவித்து மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்த பாஜவைச் சேர்ந்த யோகேஷ் கவுடா கடந்த 2016ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சதியில் ஈடுபட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களில் அப்போதைய காங்கிரஸ் அமைச்சராக இருந்த வினய் குல்கர்னியின் பெயரும் சேர்க்கப்பட்டது.
2019ம் ஆண்டு பாஜ ஆட்சிக்கு வந்ததும், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. 2023ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வினய் குல்கர்னி மீண்டும் எம்.எல்.ஏ ஆன நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட வினய் குல்கர்னி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், வினய் குல்கர்னி உட்பட 17 பேரை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளித்தது. வினய் குல்கர்னி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவிக்கும்.
