பெங்களூரு: மாதவிடாய் விடுப்பு என்பது அடிப்படை உரிமை என்றும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமையின் ஒரு பகுதி என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநில அரசு பெண் ஊழியர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, மாதத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அறிவித்தது. பெண்களுக்கான மாதவிடாய் விடுப்பை ரத்து செய்யக்கோரி பெண்களே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மாநில அரசின் இந்த உத்தரவு, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமைக்கு எதிரானது என்றும், இந்த உத்தரவால் பெண் ஊழியர்களை பணியமர்த்த நிறுவனங்கள் தயங்குவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும், இந்த கொள்கையை வகுக்கும்போது பெண்களின் கருத்துகளைக் கருத்தில் கொள்ள அரசு தவறிவிட்டது என்றும், போட்டி நிறைந்த தொழில் வாழ்க்கையில் இந்த உத்தரவு பெண்களுக்கு பாதகமாக அமையும் என்பதால், மாதவிடாய் விடுப்பு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
அந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், மாதவிடாய் விடுமுறை என்பது அடிப்படை உரிமை. மாதவிடாய் விடுமுறை பெறுவது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமையின் ஒரு பகுதி. ஆணும் பெண்ணும் சட்டத்தின் முன் சமம் என்றாலும், பெண்கள் உயிரியல் ரீதியாக வேறுபட்டவர்கள். அதை அங்கீகரிப்பதே சமத்துவத்திற்கு முழுமையான அர்த்தத்தைத் தரும் என்று உத்தரவிட்டது.
