ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காக மதுரை-மதீனா இடையே நேரடி விமான சேவை: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பேட்டி

சென்னை: புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காக மதுரையிலிருந்து மதீனாவிற்கு நேரடியாக விமான சேவை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் வவியுறுத்தியுள்ளார். இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் அளித்த பேட்டி: இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் பயண ஏற்பாடுகளை செய்திருந்த ஹஜ் கமிட்டிக்கு ஐக்கிய அரபு அமீரகம் 2 சிறப்பு விருதுகளை வழங்கியுள்ளது. இந்த விருது அரசு சார்பில் ஹஜ் செல்ல பயணிகளுக்கு செய்த ஏற்பாட்டிற்காக, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு அரசு சார்பில் ஹஜ் புனித பயணம் செல்ல விண்ணப்பித்தவர்களுக்கான குலுக்கல் முடிந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில், ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணம் செல்ல பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சென்னைக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, தற்போது சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள மதுரை விமான நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்கு வசதியாக நேரடி விமானம் இயக்க வேண்டும்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசும், மத்திய அரசும் செய்ய வேண்டும். மதுரை விமான நிலையத்தில் ஹஜ் பயணிகள் தங்க விடுதி கட்ட தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும். தமிழக அமைச்சரவையை போல, மத்திய அமைச்சரவையிலும் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: