கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தின் பிர்பும் மாவட்டத்தில் முகமது பஜார் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தியோச்சா கிராமத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது மணல் மாபியா என அழைக்கப்படும் துல்லு மண்டல் என்ற முகமது நஜிபுதீன் என்ற திரிணாமுல் காங். பிரமுகர் வீட்டில் சோதனை நடத்தினர். இரவு வரை நீடித்த சோதனையில் ரூ.28.5 கோடி ரொக்க பணம் மற்றும் 15 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் மேற்குவங்க மாநில முன்னாள் அரசு பேருந்து ஓட்டுநரும், துல்லு மண்டலின் மைத்துனருமான மினார் மண்டல் என்பவரது இரண்டு மாடி வீடுகளில் காவல் துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் தலா 1 கிலோ எடையுள்ள 14 தங்க கட்டிகள், தலா 100 கிராம் எடையுள்ள 10 தங்க பிஸ்கட்டுகள்(இதன் தற்போதைய மொத்த சந்தை மதிப்பு ரூ.21.5 கோடி) ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து மினால் மண்டலை கைது செய்த காவல் துறையினர் அவருடைய வீடுகளுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள கல் வணிகர் துல்லு மண்டல் என்ற முகமது நஜிபுதீனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
