கரூர், ஜூலை 30: கரூரில் வாங்குவோர் விற்போர் சந்திப்புக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். கரூர் கலெக்டர் முத்துக்குமரன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் FaMe TN அமைப்பு மூலம் கரூரில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு [RBSM- Reverse Buyer Seller Meet] நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சார்ந்த 600 க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும், 40 க்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் பங்கு பெற உள்ளன. இதில் குறிப்பாக ஜவுளி தயாரிக்கும் இப்பகுதியைச் சார்ந்த நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய, வெளிநாடுகளைச் சார்ந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய ஒரு வாய்ப்பாகும்.
வாங்குவோர் விற்போர் சந்திப்பு 30.07.2026 மற்றும் 31.07.2026 ஆகிய இரண்டு நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 4 மணி வரை கரூர் தாந்தோணிமலையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிர்புறம் அமைந்துள்ள VRS வேல் மஹால் அரங்கில் நடைபெற உள்ளது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் மற்றும் மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். ஆகவே கரூர் மாவட்டத்தைச் சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு கரூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
