கரூர் ஜீவா நகர் கிழக்கு பகுதியில் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

 

கரூர், ஜூலை 30: கரூர் ஜீவா நகர் கிழக்கு பகுதியில் டவர் அமைக்கும் பணி தடுத்து நிறுத்த கலெக்டரிடம் பொதுமக்கள், கவுன்சிலர் மனு அளித்தனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநகராட்சி கவுன்சிலர் தண்டபாணி மற்றும் இந்த பகுதியினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாநகராட்சியின் 41வது வார்டு கவுன்சிலராக உள்ளேன். வார்டு மக்களின் கோரிக்கைகளை அடையாளம் கண்டு நிறைவேற்றி வருகிறேன். இதில் 41வது வார்டுக்குட்பட்ட ஜீவா நகர் கிழக்கு பகுதியில், பொதுமக்களின் வீடு அருகே, ஒரு தனியார் நிறுவனம், அலைபேசி கோபுரம் அமைப்பதற்காக 5 அடி ஆழமும், 30 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட குழியை தோண்டியுள்ளது.

அடர்ந்த குடியிருப்பு பகுதியான இந்த பகுதியில் சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். ஆபத்தான முறையில் தோண்டப்பட்ட இந்த குழியால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, இந்த பகுதியில் நடைபெற்று வரும் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திட வேண்டும் என பொதுமக்கள் மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: