- தமிழ்நாடு அரசு
- கோயம்புத்தூர்
- மதுரை
- எஸ்.பி. வேலுமணி
- முன்னாள்
- அஇஅதிமுக
- அமைச்சர்
- தொண்டாமுத்தூர்
- சட்டமன்ற உறுப்பினர்
- மதுரை நகராட்சி நிறுவனங்கள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- மான்செஸ்டர்
- தென் இந்தியா…
அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் பெருநகரங்களாக கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகராட்சிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவின் “மான்செஸ்டர்” எனப் போற்றப்படும் கோவை மாவட்டம், தொழில் முனைவோர் அதிகம் உள்ள மாவட்டமாக விளங்குகிறது. குறிப்பாக ஜவுளித் தொழில், பொறியியல் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் தொழில் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிட்கோ தொழிற்பேட்டைகள், பள்ளிகள், கல்லூரிகள், சிறப்புமிக்க மருத்துவமனைகள் மற்றும் பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் அதிக அளவில் அமைந்துள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் வேலைவாய்ப்புக்காக மக்கள் வரும் முக்கிய மாவட்டமாக கோவை திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கோவை மாவட்டத்தில் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும், இதன் காரணமாகவே அதிமுக ஆட்சியில் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
அதன்படி, கோவை மாநகரில் ரூ.10,740 கோடி மதிப்பீட்டில், 39 கிலோமீட்டர் தொலைவிற்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரை, உக்கடத்திலிருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் திட்டமும், மதுரை மாநகரில் ரூ.11,360 கோடி மதிப்பீட்டில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை சுமார் 32 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்டமும் செயல்படுத்த திட்டமிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கோவை மற்றும் மதுரை நகரங்களின் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதால் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது என மத்திய அரசு கோப்புகளை திருப்பி அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதை காரணம் காட்டி, இத்திட்டம் கைவிடப்படுவதாக இரண்டாவது முறையாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதாக எஸ்.பி. வேலுமணி குறிப்பிட்டுள்ளார்.
தொழில், வணிகம், சுற்றுலா மற்றும் ஆன்மிகப் பயணங்களுக்காக தினமும் ஏராளமானோர் கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு வந்து செல்கின்றனர். இதனால், இரு நகரங்களிலும் சுமார் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் போக்குவரத்து தேவைகள் அதிகரித்துள்ளன. போதுமான சாலை வசதிகள் இல்லாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயண நேரமும் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் காரணங்களால் தான் அதிமுக ஆட்சியில் கோவை மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வடமாநிலங்களிலுள்ள இந்தூர், ஆக்ரா, பாட்னா மற்றும் போபால் போன்ற முக்கிய நகரங்களில் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக இருந்தபோதிலும், அங்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், பழைய கணக்கெடுப்பின் அடிப்படையில் திட்டத்தை நிராகரிக்காமல், தற்போதைய உண்மை நிலையை ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி, கோவை மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
