நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தினர் பங்கேற்கலாம்: குற்றாலத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி முன்னாள் படை வீரர்கள் குறைதீர் முகாம்

 

நெல்லை, ஜூலை 27: முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆகஸ்ட் 2ம் தேதி குற்றாலத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து நெல்லை கலெக்டர் ஆனந்த் மோகன் கூறியிருப்பதாவது:முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் ஓய்வூதியம் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான குறைகளைத் தீர்க்கும் நோக்கில், மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் ஆவணக் காப்பகத்தின் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் சிறப்பு குறைதீர்ப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம், வருகின்ற ஆக.2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று குற்றாலத்தில் சேனைத்தலைவர் மகாலில் வைத்து நடைபெறவுள்ளது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள முன்னாள் படை வீரர்களுக்காக நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் தங்களது SPARSH ஓய்வூதிய இணையதளம் தொடர்பான குறைகள், ஓய்வூதியப்பிரச்னைகள். SPARSH-ல் ஆதார் எண், பான் கார்டு மற்றும் மொபைல் எண் இணைத்தல், வாழ்நாள் சான்று சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெற்று தங்களது குறைகளைத் தீர்த்துக்கொள்ளலாம். எனவே, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, சிறப்பு முகாமில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: