போச்சம்பள்ளி, ஜூலை 24: வரலட்சுமி பண்டிகையை முன்னிட்டு, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயிகள் மல்லிகை தோட்டங்களை கவாத்து செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றுப்படுகையான காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, திம்மாபுரம், மலையாண்டஅள்ளி, வேலம்பட்டி, பாலேகுளி சந்தம்பட்டி, குள்ளம்பட்டி, மத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் 500 ஏக்கருக்கு மேல் மல்லிகை பயிரிடப்பட்டுள்ளது. நல்ல வருவாயை ஈட்டித்தரும் மல்லிகைக்கு, பெங்களூரு மார்க்கெட்டில் எப்போதுமே நல்ல வரவேற்பு உள்ளது. வெயில் அதிகம் உள்ள நாட்களில், நாள் ஒன்றுக்கு சுமார் 50 டன் மல்லிகை பெங்களூருக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதே போல் பனி காலங்களில் விளைச்சல் கடுமையாக பாதிப்படையும். இந்நிலையில், வரலட்சுமி பண்டிகை வருவதை முன்னிட்டு, விவசாயிகள் தங்கள் மல்லிகை தோட்டத்தை கவாத்து செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், மல்லிகை தோட்டம், ஊட்டி தேயிலை தோட்டங்களை போன்று கண்கவர் தோற்றத்துடன் காட்சி அளிகிறது.
