புதுடெல்லி: அரசு அல்லது பொதுப் பயன்பாட்டிற்காகப் பட்டா நிலம் கையகப்படுத்தப்படும் போது வழங்கப்படும் தொகை நிலம் இழப்பீடு எனப்படும். கிராமப்புறங்களில் சந்தை மதிப்பை விட நான்கு மடங்கும், நகர்ப்புறங்களில் இரண்டு மடங்கும் நியாயமான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நிலம் இழப்பீட்டு தகராறுகள் தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த, நீதிபதிகள் ஜால்மால்யா பாக்ஷி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து வழக்கை பரிசீலனை செய்த நீதிபதிகள் கூறியதில்,’இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் 1956ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலம் தொடர்பான இழப்பீட்டு தகராறுகளை, அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தீர்த்து வைப்பது என்பது ஏற்கத்தக்கது கிடையாது. மேலும் இதுபோன்ற தகராறுகள் என்பது ஒரு நீதித்துறை சார்ந்த செயல்பாடு ஆகும்.
நெடுஞ்சாலை சட்டத்தின் கீழான நடவடிக்கைகளின் போது நில உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பாதகமான விஷயமாக இந்த நடவடிக்கை இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள நிலங்கள் பொதுவாக அதிக சந்தை மதிப்பை கொண்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள பிரச்சனையில் அரசின் கொள்கை முடிவுக்காக காத்திருக்கிறோம். இருப்பினும் நாங்கள் திருத்தத்தை மட்டுமே முன்மொழிகிறோம்.
அரசு இந்த விவகாரத்தை ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை மேற்கொள்ளும் பட்சத்தில் அதனை நாங்கள் வரவேற்போம். பொருத்தமான சட்டமியற்றும் செயல்முறைக்கு வாய்ப்பு இருக்கும்போது, இந்த விவகாரத்தை நாங்கள் மேலோட்டமாகவோ அல்லது அவசர கதியில் இறுதியாகவோ தீர்மானிக்க விரும்பவில்லை. அரசின் கொள்கைக்காக கண்டிப்பாக சிறிது காலம் காத்திருக்கலாம்’ என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
