பெரம்பலூர்,ஜூலை 21: மேல்வாடி கிராமத்திற்குச் செல்லும் மண்பாதையை, தார் சாலையாக மாற்றித்தர வேண்டும் என மேல்வாடி கிராம பொதுமக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுஅளித்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் குறை தீர்க்கும் கூட்டஅரங்கில் நேற்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டக் கலெக்டர் சரண்யா அறி தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, காரியானூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்வாடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அவ்வூரைச் சேர்ந்த முத்துசாமி மகன் வெங்கடேசன்(32) என்பவரது தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டவாறு திரண்டு வந்து அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, கை.களத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காரியானூர் கிராமத்தில் இருந்து, மேல்வாடி கிராமத்திற்கு செல்லும் 1.5 கி.மீ தூரமுள்ள மண் பாதையை, தார்சாலையாக மாற்றி, இடையில் வரும் ஓடையில் பொதுமக்கள் விவசாயிகள் பயன்பெறக் கூடிய வகையில் பாலம் அமைத்துத் தர வேண்டும் என அவர்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
