பெரம்பலூர், ஜூலை 21: பெரம்பலூரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பாக 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி 300க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்து கோரிக்கை மனுஅளித்தனர். பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பாக நேற்று காலை சங்கத்தின் மாவட்ட கவுரவ தலைவர் கணேசன் தலைமையில், மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் செந்தில் குமார், மாவட்ட துணைத் தலைவர்கள் ரேவதி, திருமுருகன், மாவட்ட இணை செயலாளர்கள் செந்தில்குமார், ராமலிங்கம் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 55 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் கட்டுப் பாட்டில் இயங்கி வரும், 297 முழுநேர, பகுதிநேர நியாய விலைக் கடைகளில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், வங்கி பணியாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய அலுவலகம் முன்பிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று, ஆர்ப்பாட்டம் செய்து, பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :
தொடக்க கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள நிபந்தனைகளைத் தளர்த்தி, அனைத்து சங்கங்களுக்கும் புதிய ஊதிய உயர்வு முழுமையாக அனுமதிக்கப்பட வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கும் புதிய ஊதியம் நிலுவைத் தொகையுடன் அனுமதிக்க வேண்டும். பணியாளர்கள் பணி ஓய்வு பெறும் தினத்தன்றே ஓய்வுகால நிதி பயன்கள் முழுமையாக அனுமதிக்கப்பட வேண்டும். கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் அனுமதிக்கப்பட வேண்டும். பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்த்தி அனுமதிக்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் மாவட்ட அளவில் பணி மூப்பு பட்டியல் தயாரித்து, பாரபட்சமற்ற வகையில் பதவி உயர்வு அனுமதிக்க வேண்டும். தாயுமானவர் திட்டத்தில் விற்பனையாளர்கள் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு நடைமுறை சிக்கல்களை களைந்து ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கி தர வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து பரிசீளித்து நிறைவேற்றா விட்டால் ஆகஸ்ட் 3ம் தேதியிலிருந்து கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கம் வேலை நிறுத்த போராட்டம்
- பிரைமரி கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம்
- பெரம்பலூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மாநில முதன்மை கூட்டுறவு வங்கி அனைத்து ஊழியர் சங்கம்
