செய்யாறு, ஜூலை 18: செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்யாறில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை வட்டாட்சியர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. செய்யாறு வட்டாட்சியர் அசோக்குமார் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 105 பேர் கலந்து கொண்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம், காந்தி சாலை, சினிமா தியேட்டர் வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
அதில் மாணவர்கள் கையில் பதாகைகளை ஏந்தி, ஜூலை 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை சுய விவர கணக்கெடுப்பு நடத்தவும், ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் சார் ஆய்வாளர் வெங்கடேசன், தலைமை இடத்து தாசில்தார் கோபால், மண்டல துணை தாசில்தார் சுரேஷ்பாபு, வருவாய் ஆய்வாளர் திருமால் மருகன் மற்றும் வருவாய் துறை, காவல் துறை, ஆசிரியர்கள் மாணவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
