திருவண்ணாமலை, ஜூலை 17: முதன்முறையாக நாடு முழுவதும் முழுமையான டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சுய கணக்கெடுப்பு பணி இன்று முதல் வரும் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. குடும்பத் தலைவர் அல்லது குடும்ப நபர்களில் ஒருவர் சுய கணக்கெடுப்பு se.census.gov.in என்ற இணையதளம் மூலம் வீடு இருப்பிடத்தை வரைபடத்தில் குறியிட்டபின் வீடுகள் மற்றும் வசதிகள் குறித்து காண்பிக்கும் 33 வினாக்களுக்குரிய பதில்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த சுய கணக்கெடுப்பானது கணக்கெடுப்பாளரின் வருகைக்கு முன்னர் சுய கணக்கெடுப்பில் பதிவு செய்து கொள்ளலாம்.குடும்பம் ஒன்றுக்கு ஒரு மொபைல் எண்ணில் மட்டுமே பதிவு செய்ய முடியும். வீடுகள் மற்றும் வசதிகள் குறித்து சுய கணக்கெடுப்பு இணையதளத்தில் பதிவு செய்த பின்பு 11 இலக்கம் கொண்ட சுய கணக்கெடுப்பு எண் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக வரும்.
இந்த 11 இலக்கம் கொண்ட எண்ணினை வீட்டிற்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் வழங்க வேண்டும். இந்த சுய கணக்கெடுப்பானது எங்கிருந்து வேண்டுமென்றாலும் பதிவு செய்து கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து, 1.8.2026 முதல் 30.8.2026 வரை வீடுகள் மற்றும் வீட்டுப்பட்டியல்கள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு பதிலளிக்க, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான உதவி எண் 1855 ஆகும். மேலும், கீழ்கண்ட கியுஆர் கோடை பயன்படுத்தியும் சுய கணக்கெடுப்பு செய்து கெள்ளலாம் என கலெக்டர் வந்தனாகார்க் தெரிவித்தார்.
