குன்னூர், ஜூலை 10: குன்னூர் அருகே குடியிருப்புகளுக்குள் புகுந்த புலியை கண்டு பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதே போல தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானை விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில காலமாகவே சிறுத்தைகள் மற்றும் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குன்னூர் அருகேயுள்ள கட்டபெட்டு பகுதியில், உலா வந்த சிறுத்தை ஒன்றை புலி ஒன்று ஆக்ரோஷமாக துரத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. வனவிலங்குகளுக்கு இடையேயான இந்த மோதல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
