கோவை, ஜூலை 10: கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் ஆட்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. இஎஸ்ஐ மருந்தகங்களில் இருந்து மேல்சிகிச்சைக்காக டாக்டர்கள் பரிந்துரை செய்யப்படும் நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருவார்கள்.
பின்னர், அவர்களின் விவரங்கள் இஎஸ்ஐ மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் பதிவு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட துறைக்கு நோயாளிகள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில், புறநோயாளிகள் விவரங்களை பதிவு செய்ய 4-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது இரண்டு பேர் மட்டுமே அந்த பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, நோயாளிகளின் விவரங்களை பதிவு செய்வதில் கூடுதல் காலதாமதம் ஏற்படுகிறது.
