வெள்ளியங்காடு நால் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்

 

திருப்பூர், ஜூலை 3: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர். திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரைவுபடுத்தவும், சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மாநகராட்சி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரி சௌமியா தலைமையில் குழுவினர் நேற்று திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளின் விளம்பரப் பலகைகள், தற்காலிக நிழற்கூரைகள், மற்றும் தள்ளுவண்டிகள் ஆகியவை மாநகராட்சி ஊழியர்களால் அதிரடியாக அகற்றப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சாக்கடை கால்வாய்களை மூடி ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கான்கிரீட் தளங்களும் இடித்துத் தள்ளப்பட்டன. பெரும்பாலான வீடுகளின் வாசல் படிகள், சாக்கடை கால்வாய்களை மூடி கட்டப்பட்டிருந்தது. இதனை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Related Stories: