சென்னை: கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மாநில பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டம் மற்றும் பாடநூலை வடிவமைப்புக்கான வல்லுநர் குழுவில் சிலர் விலகியதால், அந்த குழுவை மறுசீரமைத்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, குழு தலைவராக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். குழுவில் ஆராய்ச்சியாளர் வெங்கடேஷ்வரன், ஓவியர் மணியம் செல்வன், உள்ளிட்ட 14 பேர் உறுப்பினர்களாகவும், 2 பேரை உறுப்பினர் செயலராகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் அப்படியே தொடர்கிறார்கள். விலகியவர்களுக்கு மாற்றாக சில வல்லுநர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அரசாணையில் குழுவின் பதவிக்காலம் மூன்று ஆண்டு எனவும், குழு உறுப்பினர்களின் தகுதிக்கு ஏற்ப கவுரவ ஊதியம் மற்றும் பயணப்படி வழங்குவதற்கும், தங்குமிடம் மற்றும் அது சார்ந்த வசதிகளை செய்து தருவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாடத்திட்ட உருவாக்கம், பாடநூல் உருவாக்கம் மற்றும் இதர அத்தியாவசிய கல்விசார் செயல்பாடுகளுக்கு தேவைப்படும் கூடுதல் துணைக் குழுக்களை அமைப்பதற்கு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
