×

கங்கை மற்றும் காவிரி நதிகளை இணைத்தால், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

 

கர்நாடகா: கங்கை மற்றும் காவிரி நதிகளை இணைத்தால், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். அதேபோல் கோதாவரியையும், காவிரியையும் இணைத்தால் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களின் ஒட்டுமொத்த தண்ணீர் தேவையையும் முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியும் எனவும் கூறியுள்ளார்

கர்நாடகாவின் கொப்பலில் உள்ள துங்கபத்ரா அணையின் 33 மதகுகளை ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் திறந்து வைத்தார். கர்நாடகாவின் கொப்பலில் உள்ள துங்கபத்ரா அணையில் பொருத்தப் பட்டிருந்த 19-வது மதகின் கதவு, கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் நீரில் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களுக்கும் ஜீவ ஆதாரமாகத் திகழும் துங்கபத்ராவின் அணையில் புதிதாக 33 புதிய மதகுகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து மதகுகள் திறப்பு விழா நடைபெற்றது.

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் 33 மதகுகளையும் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியதாவது: மூன்று மாநில விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க 3 மாநிலங்களும் இணைந்து பரந்த நோக்கத்துடன் இந்த நற்செயலைச் செய்து முடித்துள்ளன. இது இந்திய நீர்வளத் துறையின் வரலாற்றில் முக்கியமான தருணம். கடவுளின் ஆசியாலும் 3 மாநிலங்களின் ஒத்துழைப்பாலும் இந்த முக்கியமான பணியை விரைவாக செய்து முடிக்க எங்களால் முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘‘துங்கபத்ரா அணையில் வெறும் 6 மாதங்களில் 33 மதகுகளைப் புதிதாக அமைத்த அனைவரையும் பாராட்டுகிறேன். தண்ணீர் பங்கீடு, அதன் நிர்வாகம் நமது அனைவருக்கும் உள்ள கடமையாகும். நாட்டில் நதிநீர் இணைப்பு கட்டாயம் மட்டுமல்ல அவசியமும் கூட.

கங்கை – காவிரி நதிகளை இணைப்பதன் மூலம் நமது நாடு செழித்தோங்கும். காவிரி – கோதாவரி நதிகளை இணைத்து நாட்டுடைமை ஆக்க வேண்டும். நதிநீர் திட்டங்கள் சிறப்பாகச் செயல் பட்டால்தான் வருங்கால சந்ததியினர் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்’’ என்று வலியுறுத்தினார்.

 

 

 

Tags : Ganga and Cauvery ,India ,Andhra ,Pradesh ,Chief Minister ,Chandrababu Naidu ,Karnataka ,Andhra Pradesh ,Godavari and Cauvery ,Tamil Nadu ,Telangana ,
× RELATED EPFO போர்டல் 3 நாட்களுக்கு இயங்காது என அறிவிப்பு!