டெல்லி: எல் நினோ தாக்கத்தால் பருவமழை தாமதமாகி உள்ளதன் காரணமாக இந்தியாவின் 12 மாநிலங்களில் உள்ள சுமார் 315 மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் என்று ஒன்றிய அரசும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலும் (ICAR) எச்சரித்துள்ளன.
பாதிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியலில் இருக்கும் 12 மாநிலங்கள் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஜார்க்கண்ட், தமிழ்நாடு, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகியன இடம்பெற்றுள்ளன.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அரசு அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ள 315 மாவட்டங்களில், பாசன வசதி 25%-க்கும் குறைவாக உள்ள 111 மாவட்டங்கள் “அதிக பாதிப்புக்குரியவை” (High Vulnerability) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ள 315 மாவட்டங்களில் சுமார்111 மாவட்டங்கள் மிகக் குறைந்த பாசன வசதியைக் கொண்டுள்ளதால் அவை தீவிர பாதிப்பிற்குள்ளாகும் பகுதியாக கணிக்கப்பட்டு, அங்கெல்லாம் மாநில அரசுகளுடன் இணைந்து அவசரகால தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்து உள்ளனர்.
மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், வறட்சி மற்றும் மழைப்பற்றாக்குறை அபாயம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தற்போது வரை மழைப்பொழிவு இயல்பை விட 43% குறைவாகவே உள்ளதால், காரிஃப் (Kharif) பயிர் சாகுபடி பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜூலை 2-ஆம் தேதி வரை மழை குறைவாகவே இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள 315 மாவட்டங்களுக்கும், மாவட்ட அளவிலான அவசரகாலத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
