விஷச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்த விவகாரம்: செங்கல்பட்டில் விசாரணையை தொடங்கினார் சிபிசிஐடி ஏடிஎஸ்பி மகேஸ்வரி..!!

செங்கல்பட்டு: விஷச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி மகேஸ்வரி செங்கல்பட்டில் விசாரணையை தொடங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து கிட்டத்தட்ட 14 பேர் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் சித்தாமூர் பகுதியில் விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 22 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விசாரணையை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஏடிஎஸ்பி கோமதி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஏடிஎஸ்பி மகேஸ்வரி ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டனர். விஷச்சாராய வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் முதல்கட்டமாக விஷச்சாராயம் அருந்தி செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அஞ்சலையிடம் ஏடிஎஸ்பி மகேஸ்வரி தலைமையில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், காவல் உதவியாளர் என 10 பேர் கொண்ட சிபிசிஐடி அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தினர். அடுத்தகட்டமாக விஷ சாராயம் அருந்திய பகுதிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post விஷச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்த விவகாரம்: செங்கல்பட்டில் விசாரணையை தொடங்கினார் சிபிசிஐடி ஏடிஎஸ்பி மகேஸ்வரி..!! appeared first on Dinakaran.

Related Stories: