தோகைமலை, கடவூர் பகுதிகளில் கிணற்று பாசனத்தில் கோடை நெல் சாகுபடி-பராமரிப்பு பணியி்ல் விவசாயிகள் மும்முரம்

தோகைமலை : தோகைமலை மற்றும் கடவூர் பகுதிகளில் நடவு செய்த கோடை நெல் சாகுபடியில் தற்போது பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர். சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கரூர் மாவட்டம் தோகைமலை மற்றும் கடவூர் ஒன்றிய பகுதிகளில் கனிசமான அளவில் கோடை நெல் சாகுபடியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். கடவூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள 20 ஊராட்சிகளும் ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்துப் பாசன பகுதிகளாகவும் உள்ளது.

இதேபோல் தோகைமலை ஒன்றியங்களில் நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி மற்றும் குளித்தலை பகுதிகள், நங்கவரம், நச்சலூர், குறிச்சி, சூரியனூர் போன்ற பகுதிகளில் ஆற்றுப் பாசனமாகவும், கள்ளை, தளிஞ்சி, தோகைமலை, நாகனூர், கழுகூர், ஆர்ச்சம்பட்டி, ஆர்டிமலை, புழுதேரி, வடசேரி, ஆலத்தூர், பாதிரிபட்டி உட்பட 17 ஊராட்சிகள் கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்துப் பாசன பகுதிகளாகவும் இருந்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை கணிசமான அளவில் பெய்து காவிரிக்கு நீர்வரத்து வர தொடங்கியது. இதனால் கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கபட்டதால் ஆற்று பாசன விவசாயிகளும் கிணற்றுப்பாசன விவசாயிகளும் சம்பா சாகுபடி செய்து அறுவடை செய்தனர்.

இதேபோல் கடவூர் பகுதிகளில் போதிய மழை இல்லாத நிலையிலும் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு விவசாயிகள் சம்பா சாகுபடியை செய்தனர். தற்போது கிணறுகளில் தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் சம்பா அறுவடை முடிந்த பின்பு கோடை நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். இதில் அட்ய பொன்னி, கோ 51, எஎஸ்பி 16, ஆடுதுரை 36 போன்ற ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து உள்ளனர். குறுவை நெல் மணிகள் 105 நாட்களில் இருந்து 110 நாளில் மகசூல் பெறும் மேற்படி ரக விதை நெல், 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1150 முதல் ரூ.1300 வரை தனியார் கடைகளில் பெற்று விதைத்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு 45 கிலோ வரை விதை நெல் தேவைப்படுவதாகவும் கூறுகின்றனர்.

தற்போது ஆற்று பாசனத்தைவிட கிணற்று பாசன விவசாயிகள் கோடை நெல் சாகுபடியில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் கோடை சாகுபடியில் தற்போது அனைத்து பகுதிகளிலும் நடவு பணிகளை முடித்துவிட்டு முதல் களை எடுக்கும் பணிகளையும் நிறைவு செய்தனர். தற்போது பல இடங்களில் இரண்டாம் களை எடுக்கும் பணிகளும் நிறைவு பெற்ற நிலையில் சில இடங்களில் முதல் களை எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது தோகைமலை மற்றும் கடவூர் பகுதிகளில் கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டு உள்ள விவசாயிகள் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களது வயல்களை பராமரித்து வருகின்றனர்.

The post தோகைமலை, கடவூர் பகுதிகளில் கிணற்று பாசனத்தில் கோடை நெல் சாகுபடி-பராமரிப்பு பணியி்ல் விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: