டெட்ரா பாக்கெட்டில் மதுபானங்கள் விற்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு: ஐகோர்ட்டில் டாஸ்மாக் தகவல்

சென்னை: டெட்ரா பாக்கெட்களில் மதுபானம் விற்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் மதுபானங்களை டெட்ரா பாக்கெட்களில் அடைத்து விற்க மதுபானங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியை சேர்ந்த எஸ்.பிரதாப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், பாலித்தின், அலுமினியம், காகிதம் ஆகியவற்றின் கலவையால் உருவாக்கப்படும் டெட்ரா அட்டையை மறுசுழற்சி செய்வதற்கான மையங்கள் இல்லை. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். டெட்ரா பேக்குகளில் அடைத்து உடல்நலக் குறைவு ஏற்படுவதுடன், மதுபானங்களை கடத்துவோருக்கு சாதகமாகவும் மாறிவிடும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சம்சு நிஹார், அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துகுமார், டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் கே.சதீஷ்குமார், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் சண்முகவள்ளி சேகர் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, டெட்ரா பாக்கெட்களில் மதுபானம் விற்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு இன்னும் அரசுக்கு அறிக்கை அளிக்கவில்லை. மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மாநிலம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. நிபுணர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

The post டெட்ரா பாக்கெட்டில் மதுபானங்கள் விற்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு: ஐகோர்ட்டில் டாஸ்மாக் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: