தாம்பரம் – கடற்கரை ரயில்கள் இன்று ரத்து: தாம்பரம் பஸ் நிலையத்தில் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரை மார்க்கமாகவும், செங்கல்பட்டு மார்க்கமாகவும் தினமும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பயணிகள் பணித்து வருகின்றனர். இந்நிலையில், பராமரிப்பு பணி காரணமாக, எழும்பூர்-விழுப்புரம் பிரிவில் செயின்ட் தாமஸ் பகுதியில் இன்று காலை 10.45 மணி முதல் மதியம் 3.45 மணி (5 மணி நேரம்) ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. அதன்படி, தாம்பரம் – கடற்கரை இடையே இன்று காலை 9.08, 9.50, 10.30, 10.40, 11.00, 11.10, 11.30, 11.40 மற்றும் மதியம் 12.05, 12.35, 1.00, 1.30, 1.40, 2.5, 2.20, 2.50, 2.57 மற்றும் 3.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.

மறுமார்க்கமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று காலை 10.18, 10.30, 10.36, 10.46, 10.56, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50 மற்றும் 12.00, 12.10, 12.30, 1.15, 1.30, 2.00, 2.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதுபோல், கடற்கரை – செங்கல்பட்டு இடையே இன்று காலை 10.56, 11.40 மற்றும் மதியம் 12.20, 12.40, 1,45, 2.15, 2.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மறுமார்க்கமாக செங்கல்பட்டு – கடற்கரை இடையே இன்று காலை 11.00, 11.30 மற்றும் மதியம் 12.00, 1.00, 1.45, 2.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இன்று 5 மணி நேரம் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதையடுத்து, தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிய தொடங்கினர். பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் ஏராளமான பயணிகள் குவிந்து முண்டியடித்து பேருந்துகளில் ஏறியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும், மாநகர பேருந்துகளில் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்றனர். திடீரென ஒரே நேரத்தில் ஏராளமான பயணிகள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நெரிசல் காரணமாக தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து இரும்புலியூர் பகுதி வரை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டதால் வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்றாக ஊர்ந்தபடி சென்றன.

The post தாம்பரம் – கடற்கரை ரயில்கள் இன்று ரத்து: தாம்பரம் பஸ் நிலையத்தில் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: