காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு உழவுப்பணிக்கு 50% மானியம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உழவுப்பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, மொத்த தொகையில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையில் வேளாண் இயந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ், உழவுப்பணி மேற்கொள்ளும் சிறு விவசாயிகளுக்கு, மொத்த தொகையில் 50% தொகை உழவு மானியமாக வழங்கப்படவுள்ளது.

அதில் 1 ஏக்கர் நிலத்தை உழவுசெய்ய அதிகபட்ச மானியமாக ரூ.250 என்ற அடிப்படையில் 1 விவசாயிக்கு, ஒருமுறை நன்செய் உழவுக்கு ரூ.625ம் மற்றும் புன்செய் உழவுக்கு ரூ.1,250ம் அதிகபட்ச மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிறு விவசாயிகள் இ-வாடகை செயலியில் சிறு விவசாய சான்று பதிவேற்றி பதிவு செய்து பயன்பெறலாம். வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், சிறு விவசாயி சான்று நிலவரை படம், ஆதார் அட்டை மற்றும் ஒளி நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: செயற்பொறியாளர் (வே.பொ.), 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35. கைபேசி எண்:99529 52253, உதவி செயற்பொறியாளர் (வே.பொ.), வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் 631 502. அலைபேசி எண்: 044- 24352356, கைபேசி எண்: 90030 90440. ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு உழவுப்பணிக்கு 50% மானியம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: