மாணவர்களை ஜூஸ் வாங்க அனுப்பிய ஆசிரியர் சம்பளத்தை பிடித்த சிஇஓ

சீர்காழி: சீர்காழி அருகே மாணவர்களை ஜூஸ் வாங்க அனுப்பிய ஆசிரியருக்கு ஒரு நாள் சம்பளம் பிடிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஆசிரியர் ஒருவர், 4 மாணவர்களை கடைக்கு சென்று பழஜூஸ் வாங்கி வரும்படி அனுப்பி உள்ளார். இதைத்தொடர்ந்து 4 மாணவர்களும், சாலையை கடந்து ஜூஸ் வாங்குவதற்காக சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, 4 மாணவர்களையும் அழைத்து பள்ளி நேரத்தில் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு மாணவர்கள், ஆசிரியர் ஜூஸ் வாங்க அனுப்பியதாக தெரிவித்தனர். தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர், பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது ஆசிரியர், மாணவர்களை ஜூஸ் வாங்க அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட ஆசிரியருக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யும்படி தலைமை ஆசிரியரிடம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

The post மாணவர்களை ஜூஸ் வாங்க அனுப்பிய ஆசிரியர் சம்பளத்தை பிடித்த சிஇஓ appeared first on Dinakaran.

Related Stories: