இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 27 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 மீன்பிடி படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், இருவேறு சம்பவங்களில் 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு எனது கவலையை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 14ம் தேதி (சனிக்கிழமை) 4 மீன்பிடி படகுகளில் சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்களும், மற்றொரு சம்பவத்தில் ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற நான்கு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நான் ஏற்கனவே உங்களுக்கு எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, தொடர்ச்சியாக இதுபோன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ள மீனவர்கள் கைது செய்யப்படுவதால், மீனவ மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளேன்.

இதுபோன்ற சம்பவங்களால் மீனவ சமுதாய குடும்பத்தினருக்கு பொருளாதார இழப்புகள் ஏற்படுவதோடு, இத்தொழிலை நம்பியுள்ள எண்ணற்ற குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தூதரக அளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 27 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: