மாநில தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் இன்று பதவியேற்பு; ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்..!!

சென்னை: மாநில தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் இன்று பதவியேற்கவுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, காலியாக இருந்த தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர்கள் பதவியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தகவல் ஆணையர்களின் பதவியிடங்களுக்கான பெயர்கள் முடிவு செய்யப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி, தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதில், தலைமைத் தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகீல் அக்தரும், தகவல் ஆணையர்களாக முன்னாள் ஏடிஜிபி தாமரை கண்ணன், பிரியா குமார், திருமலைமுத்து, செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள பிகார் மாநிலத்தை சேர்ந்த ஷகீல் அக்தர், 1989-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் ஆரூரில் காவல் துணை கண்காணிப்பாளராக முதல்முதலில் பணியில் சேர்ந்தார். மேலும், சென்னை காவல் ஆணையராகவும், சிபிசிஐடி டிஜிபியாகவும் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், மாநில தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் இன்று பதவியேற்கவுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். ஷகீல் அக்தருடன் மாநில தகவல் ஆணையத்தின் 4 உறுப்பினர்களும் பதவியேற்க உள்ளனர். ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. ஆளுநர் – முதல்வர் இடையே மோதல் முற்றி வரும் நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் அழைக்கப்பட்டாரா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த பதவிகளில் நியமிக்கப்படுகிறவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு அல்லது 65 வயது பூர்த்தியாகும் வரை பதவியில் இருப்பார்கள்.

The post மாநில தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் இன்று பதவியேற்பு; ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்..!! appeared first on Dinakaran.

Related Stories: