சிவகங்கை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் ரூ.2.35 கோடி மோசடி வருவாய் ஆய்வாளர் கைது: கணவரும் சிக்கினார்

சிவகங்கை: சிவகங்கை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் ரூ.2.35 கோடி மோசடி செய்ததாக வருவாய் ஆய்வாளர் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு முதுநிலை வருவாய் ஆய்வாளராக சீதாப்பிரியா பணி புரிந்து வருகிறார். இவர், கடந்த 2017 முதல் 2023 வரை ஆதிதிராவிடர் விடுதி மாணவ, மாணவிகளுக்கு அரசு ஒதுக்கிய பணத்தை கையாடல் செய்ததாக கலெக்டருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கலெக்டர் நடத்திய விசாரணையில் சீதாப்பிரியா ரூ.9லட்சம் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.5 லட்சத்தை சீதாப்பிரியா திரும்ப செலுத்தினார்.

இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு தாசில்தார் உமாமகேஸ்வரி, சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மோசடி குறித்து தொடர் விசாரணை நடத்த கலெக்டர் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில் தனிக்குழு அமைக்கப்பட்டது. இதில் சீதாப்பிரியா ரூ.2 கோடியே 35 லட்சத்து 36ஆயிரத்து 468 வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை வங்கி கணக்கின் மூலம் சீதாப்பிரியாவின் கணவர் ராம்குமார் உள்பட 4 பேரின் வங்கி கணக்குக்கு அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை மாவட்ட குற்றப்பிரிவிற்கு மாற்றி எஸ்பி அரவிந்த் உத்தரவிட்டார்.
மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முதற்கட்டமாக நேற்று சீதாப்பிரியா மற்றும் அவரது கணவர் ராம்குமாரை கைது செய்தனர். பணமோசடி வழக்கில் மேலும் பல அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுவதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிவகங்கை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் ரூ.2.35 கோடி மோசடி வருவாய் ஆய்வாளர் கைது: கணவரும் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: