சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம்: நடைமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு..!!

சென்னை: சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. எலக்ட்ரானிக் என்போர்ஸ்மென்ட் கருவியை பயன்படுத்தி போக்குவரத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்த்தல் உள்ளிட்ட ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், போக்குவரத்து காவலர்கள், தங்கள் உடலில் கேமராவை பொருத்தி வாகன போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும். போக்குவரத்து காவல் வாகனங்களில் டேஸ் போர்டில் பொருத்தும் வகையிலான கேமராக்கள் மூலம் போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும்.

மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்கள், முக்கிய சந்திப்புகளில் கேமராக்களை பொருத்தி போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும். தானியங்கி வண்டி எண் அறியும் வகையில் தொழில்நுட்ப வாகனங்கள் மூலம் அறிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும். அதிவேகம், சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பதை கண்காணிப்பதும், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வாகனங்கள், சிக்னலை மீறக்கூடிய வாகனங்கள், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வது போன்ற விதிமீறல்களை கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் விதிக்க புதிய நடைமுறை செயல்படுத்தப்படவுள்ளது.

தேதி, நேரம், இடம் ஆகிய விவரங்களுடன் மின்னஞ்சல் குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும். அபராத தொகையை இணையதளம் அல்லது போக்குவரத்து காவல்நிலையங்களில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில், போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது.

 

The post சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம்: நடைமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு..!! appeared first on Dinakaran.

Related Stories: