இந்தநிலையில், மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்கச் சென்ற பின்னர் இறால் ரூ.350-400, நன்டு ரூ.250, கணவாய் ரூ.180, காரல் ரூ.15, சங்காயம் ரூ.10 என 50 சதவீதம் வரை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒன்றிணைந்து சிண்டிகேட் அமைத்துக்கொண்டு விலையை வெகுவாக குறைத்துள்ளனர். இதனால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இந்தநிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர் சங்க அவசர கூட்டம் மாவட்டத்தலைவர் வி.பி.ஜேசுராஜா தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மீனவ சங்கத்தலைவர் சகாயம், எமரிட், எடிசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இறால் மீன் கொள்முதல் செய்து வரும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விலையை 50 சதவீதம் வரை குறைத்து எடுப்பதை கண்டித்தும், மீனவர்கள் பிடித்தும் வரும் இறால் மீனுக்கு உரிய விலை நிர்ணயம் செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 560க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக மீன்பிடி மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டம் 2வது நாளாக இன்றும் தொடர்கிறது. மீனவர்களின் வேலைநிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மீன்பிடி தொழில் சார்ந்த 5,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து மீன்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
The post ராமேஸ்வரம் மீன்களுக்கு போதிய விலை நிர்ணயம் செய்யக் கோரி மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்: 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்திவைப்பு appeared first on Dinakaran.