அரசியலில் இளைஞர்கள் ஆர்வம்: வானொலி நிகழ்ச்சியில் மோடி பாராட்டு

புதுடெல்லி: அரசியலில் அதிக இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதாக வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார். பிரதமர் மோடி இன்று தனது வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசுகையில், ‘விண்வெளித்துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது. கடந்த 23ம் தேதி நாட்டு மக்கள் முதல் தேசிய விண்வெளி தினத்தை கொண்டாடினர். இது மீண்டும் சந்திரயான்-3 வெற்றியை கொண்டாட வழி வகுக்கிறது. கடந்தாண்டு ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தெற்குப் பகுதியில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய இடத்தை சிவசக்தி என்று பெயரிட்டு அழைக்கிறோம். பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்த பிறகு, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியல் கட்சியில் இணையுமாறு வலியுறுத்தினேன். என்னுடைய இந்த கருத்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அரசியலில் ஈடுபட இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் தங்கள் தாத்தா அல்லது பெற்றோரிடம் அரசியல் பாரம்பரியம் இல்லாததால் அவர்களால் அரசியலுக்கு வரமுடியவில்லை என்றும், வம்ச அரசியல் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் எனக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களும் அரசியலில் முன்னேற முடியும் என்று நம்புகிறேன். அவர்களின் அனுபவமும், ஆர்வமும் நாட்டுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இளம் தொழில் முனைவோரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது’ என்றார்.

The post அரசியலில் இளைஞர்கள் ஆர்வம்: வானொலி நிகழ்ச்சியில் மோடி பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: