×

ஒருவார காய்ச்சலுக்கு மருத்துவமனை செல்லாததால் 2 வயது குழந்தை பரிதாப பலி

ஆவடி: ஒருவார காய்ச்சலுக்கு மருத்துவமனை செல்லாததால் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. ஆவடி பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் ராம்ஜித் (33). அதே பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கல்பனா (30) என்ற மனைவி உள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்த தம்பதிக்கு அன்புல் (9), பிரன்சூல் (7) மற்றும் டிபிஹன் (2) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இதில் 2 வயது குழந்தையான டிபிஹனை தாய் கல்பனா நேற்றுமுன்தினம் காலை அருகில் உள்ள பால்வாடியில் விட்டுள்ளார். மீண்டும் மதியம் 12 மணியளவில் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்து உணவு அளித்து படுக்க வைத்துள்ளார்.

இதில் வெகு நேரமாகியும் குழந்தை கண் விழிக்காததால் கல்பனா சந்தேகம் அடைந்தார். எனவே, அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவர்களிடம் குழந்தையை காண்பித்துள்ளார். அப்போது, பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆவடி சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியபின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், பெற்றோரிடம் தீவிர விசாரணை செய்தனர்.

இதில், குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாகவே காய்ச்சல் இருந்ததாகவும், மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல் அருகே உள்ள மருந்தகத்தில் மருந்து வாங்கி கொடுத்து வந்ததாக போலீசாரிடம் தம்பதியர் கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்தவித உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டாலும், மருத்துவரை அணுகி அதற்கு ஏற்ப மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தாமாக மருந்தகங்களுக்குச் சென்று மருந்துகளை வாங்க வேண்டாம் என்றனர்.

The post ஒருவார காய்ச்சலுக்கு மருத்துவமனை செல்லாததால் 2 வயது குழந்தை பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Avadi ,Pilliyar Koil Street ,
× RELATED ரயில் இல்லாமல் பயணிகள் அவதி...