×

பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக தீ தடுப்பு, தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம்: ஆய்வுக்குப்பின் அனுமதி வழங்க கலெக்டர் உத்தரவு

திருவள்ளூர், அக். 5: தீ தடுப்பு, தொழிலக பாதுகாப்பு குழு கூட்டத்தில் நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க கோரும் விண்ணப்பங்களுக்கு முறையாக ஆய்வு செய்து அனுமதி வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தீ தடுப்பு மற்றும் தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிவாச பெருமாள், ஆவடி துணை காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க கோரும் விண்ணப்பங்களை அரசு விதிகளை முறையாக பின்பற்றி, அனைத்து கடைகளும் மற்றும் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும் முறையாக ஆய்வு செய்து அனுமதி வழங்கவும் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களும் கலெக்டர் உத்தரவிட்டார். இதில் பொன்னேரி சப் – கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, வருவாய் கோட்டாட்சியர்கள் திருவள்ளூர் ஏ.கற்பகம், திருத்தணி தீபா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

19ம் தேதிக்குள் விண்ணப்பம்
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற இணையத் தளம் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறை ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த இணைய வழியில் https://www.tnesevai.tn.gov.in முலம் அக்டோபர் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அக்டோபர் 19ம் தேதிக்கு மேல் பெறப்படும் பரிசீலனைக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாது என்பதை ஆவடி காவல் ஆணையரகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக தீ தடுப்பு, தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம்: ஆய்வுக்குப்பின் அனுமதி வழங்க கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Fire ,Industrial Safety Committee ,Tiruvallur ,Thiruvallur District ,Fire prevention ,Dinakaran ,
× RELATED வானில் நெருப்பு வளையம்.. தென் அமெரிக்க...